கோவை: கோவையில் பிங்க் பேட்ரோல் ரோந்து போலீசார் 33 முதியவர்கள், 22 சிறுவர்களை மீட்டுள்ளனர்.
தமிழகத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், பாதுகாப்புப் பணிகளுக்காக வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
Read also கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அந்த வகையில், 2025-2026ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு (பிங்க் பேட்ரோல்) ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டு, அவ்வாகனங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதல்வர் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
பிங்க் பேட்ரோல்
இந்த பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனங்கள் தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, மதுரை மாநகரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Read also எரிவாயு தட்டுப்பாடு- கோவையில் பள்ளியின் அழுத்தத்தால் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…
இதைத் தொடர்ந்து, கோவைக்கு ஒதுக்கப்பட்ட 7 பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 55 பேரை மீட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, பெண்கள் வேலை செய்யும் இடங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான செம்மொழி பூங்கா, ஐ லவ் கோவை பார்க், கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் பிங்க் பேட்ரோல் உதவி எண்ணிற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ கிடைத்தால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு பிங்க் பேட்ரோல் விரைந்து சென்று வருகிறது.
அங்கு பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை விசாரித்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தும், முக்கியமாக பெண்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
சிறுவர்கள் மீட்பு
மேலும், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளான காட்டூர் பேருந்து நிலையம், போத்தனூர் ரோடு, உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி சிக்னல், பீளமேடு பஸ் நிறுத்தம், காந்திபார்க் ஆகிய இடங்களில் பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனம், நள்ளிரவில் திக்கற்றும் வழி தெரியாமலும் நின்று கொண்டிருந்த வயதான பெண்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வந்த சிறுவர்கள், சிறுமிகளை மீட்டுள்ளது.
Read also கோவையில் பிங்க் பேட்ரோல் மூலம் 55 சிறுவர்கள், முதியவர்கள் மீட்பு
அவர்களிடம் விசாரித்து, அறிவுரை கூறி, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், பெற்றோர் வரும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். பின்னர், அவர்களுடைய உறவினர்கள், பெற்றோர் வந்தவுடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு, இதுவரை 33 வயதான முதியவர்கள், 22 சிறுவர்கள், சிறுமிகள் என மொத்தம் 55 நபர்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் தனியாக நிற்கும் பெண்களை அவர்களுடைய வீட்டிற்கே கூட்டிச் சென்று ஒப்படைத்தும் வருகின்றனர்.
அதேபோல், கடந்த 18ஆம் தேதி குனியமுத்தூர் கரும்புக்கடை சிக்னல் அருகே மகாராஷ்டிராவைச் சேர்ந்த 8 பெண்கள், 7 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
உடனே, பிங்க் பேட்ரோல் கரும்புக்கடை சிக்னல் பகுதிக்கு சென்று குழந்தைகளையும், பெண்களையும் மீட்டனர். தொடர்ந்து, அவர்கள் கோவை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திற்கு தகவல் தெரிவித்து, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், 15 பேரும் அவர்களின் சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

