கோவை: கிணத்துக்கடவு தொகுதி விவகாரத்தில் பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில் இறங்கினர்.
இந்நிலையில், கோவை அருகே ஈச்சனாரி பகுதியில் பா.ஜ.க வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய சாலையில் அமர்ந்து போக்குவரத்தை மறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்த போராட்டத்தின் போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பா.ஜ.க வில் செயல்பட்டு வரும் விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளிக்க முயன்றார்.
அவர் கொண்டு வந்து இருந்த எரிபொருளை தனது உடலில் ஊற்றி தீவைக்க முயன்றதை அங்கிருந்த போலீசார் மற்றும் கட்சியினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் அவரை பாதுகாப்பாக காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகையில்,
“கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வலுவான ஆதரவு உள்ள பகுதி. இருந்தும் அந்த தொகுதி ஒதுக்கப்படாதது கட்சித் தொண்டர்களின் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்தனர். மேலும் கடந்த முறை பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வசந்த ராஜன் இரண்டாம் இடம் பிடித்த நிலையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதால் அவருக்கு கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை அடுத்து ஈச்சனாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி தொகுதி ஒதுக்கீடு விவகாரம் கோவையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

