கோவை: பிஎஸ்ஜி மருத்துவமனை, சாந்தி ஆசிரமம் மற்றும் ICPH அமைப்புகளுடன் இணைந்து MIT நிறுவனம் சார்பில் கோவையில் 37 குழந்தைகளுக்கு செவிக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான உதவிகளை ஜெர்மனியைச் சேர்ந்த Medical Interventional Team (MIT) செய்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சேவை தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை செவித்திறன் குறைபாடு உள்ள 78 குழந்தைகளுக்கு நவீன செவிக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நடப்பு ஆண்டில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கருவிகள் 37 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது International Center for Child and Public Health (ICPH) அமைப்பு மற்றும் சாந்தி ஆசிரமத்தின் தலைவர் கேசிவினோ அறம், பிஎஸ்ஜி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஷ்வரன், MIT நிறுவனத்தின் மருத்துவர் பரூன் சர்கார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. நாங்கள் ஒன்றிணைந்து கோவையில் காதுகேளாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிந்து வருகிறோம்.
இதனைத் தொடர்ந்து, MIT நிறுவனம் சார்பில் அந்த குழந்தைகளுக்கு செவிக்கருவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சாந்தி ஆசிரம வளாகத்தில் வரும் 26ஆம் தேதி வரை செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாங்கள் 60,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள கருவிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியவை. குழந்தைகள் எந்த நேரத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கூடுதல் பேட்டரிகளையும் MIT வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

