கோவை: பேசி, பழக மறுத்த பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் உப்பிலிபாளையம் மெயின் ரோடு மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி நந்தினி (35). இவர் வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நந்தினி பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியை சேர்ந்த மோசஸ் டேனியல்(38) என்பவருடன் பழகி வந்து உள்ளார்.
இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவரவே அவர்கள் இதனை கண்டித்தனர். இதனால் கடந்த 20 நாட்களாக நந்தினி, மோசஸ் டேனியலுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இந்நிலையில், நந்தினி சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டிற்கு சென்ற மோசஸ் டேனியல் அவரது வீட்டு கதவு மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து நந்தினியின் உறவினர்கள் அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர்கள் கோவைக்கு திரும்பினர். அப்போது மோசஸ் டேனியல் மற்றும் அவருடன் சிலர் அவரது வீட்டிற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு எழுந்தது.
ஆத்திரமடைந்த மோசஸ் டேனியல் மற்றும் அவருடன் வந்தவர்கள் நந்தினி மற்றும் அவரது மகளை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நந்தினி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோசஸ் டேனியலை கைது செய்தனர். மேலும் பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

