கோவை: ஆரத்தி எடுத்தும் திருஷ்டி கழித்தும் அதிமுக வேட்பாளருக்கு முதியவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கஸ்தூரிபாளையம், குப்பிச்சி பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் மற்றும் சுற்றி த்ருஷ்டி கழித்தும், ஏலக்காய் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர். உடன் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் அருண்குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வரவும், அதேபோல மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் இந்த தொகுதிக்கு வரவும் நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஐந்தாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து எதையுமே செய்யாமல் ஒரு ஆட்சி ஐந்தாண்டு காலம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்த ஆட்சி சட்ட ஒழுங்கு சரியில்லாத ஆட்சி, அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி, ஸ்டாலின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி, எடப்பாடி அவர்களை கோட்டைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


