நடிகனை பிடித்தால் விசில் அடியுங்க, ஆனால் நாட்டை கொடுத்து விடாதீங்க என விஜய்யின் ஆஸ்தான வில்லன் நடிகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில், திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டிக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குரல் கொடுப்பது என் கடமை
பழனி நகரில் மின்வாரிய அலுவலகம் அருகே “இளைஞர் கலை விழா” என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

பேச்சை தொடங்கிய அவர், தன்னை நடிகராக அல்ல, ஒரு பொது குடிமகனாகவே மக்களை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். தன்னை ஒரு கலைஞனாக உருவாக்கிய மக்களுக்கு, நாட்டின் முக்கிய தருணங்களில் குரல் கொடுப்பது கடமையெனவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாடல்களிடையே போட்டி
இந்த தேர்தல் மூன்று விதமான அரசியல் மாடல்களுக்கிடையேயான போட்டியாக பார்க்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர்,

கல்வி மற்றும் மொழியை பாதுகாக்கும் “திராவிட மாடல்”
சுயமரியாதையை இழக்கும் “அடிமை மாடல்”
சினிமா ஆதாரமாக உருவாகும் “மூன்றாவது மாடல்”
என வகைப்படுத்தி விளக்கம் அளித்தார்.
டபுள் இன்ஜின், டப்பா சர்க்கார்
அதே நேரத்தில், மத்திய அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்த அவர், பாஜக ஆட்சி “டபுள் இன்ஜின்” அல்ல, “டப்பா சர்க்கார்” என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் அதிகரிக்க அதிமுக வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் அரசியல் நிலையை ஒப்பிட்டு பேசும்போது, “ஒரு கிணற்றில் அமைதியாக வாழும் தவளைகளைப் போல இருக்கிறோம். நம் நாட்டில் உள்ள ஒரு தவறை, வெளியில் இருந்து ஒரு ‘பாம்பை’ அழைத்து வருகிறது. அந்த பாம்பு எல்லா தவளைகளையும், அழைத்து வந்த தவளையும் விழுங்கும் அபாயம் உள்ளது” என எச்சரித்தார்.
நடிகனிடம் நாட்டை கொடுத்துவிடக்கூடாது
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர், சினிமாவில் கிடைக்கும் புகழை அரசியலில் நேரடியாக பயன்படுத்த முடியாது என கூறினார். மக்களின் உணர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மொழி, இனப் பிரச்சனைகளை தமிழ்நாடு சந்தித்த போது எங்கே இருந்தீர்கள் என விஜய் குறித்து மறைமுகமாக சாடிய பிரகாஷ் ராஜ், ஒரு நடிகனைப் பிடித்திருந்தால், தொண்டையில் விரலை விட்டு விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுத்துவிடக் கூடாது என விமர்சித்தார்.
ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்
மேலும், தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றுவது தென்னிந்தியாவின் அரசியல் தாக்கத்தை குறைக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சு.வெங்கடேசன் கூறிய கருத்துகள் சரியானவை என்றும் அவர் ஆதரவு தெரிவித்தார்.
இறுதியாக, பெரும்பான்மை அடிப்படையில் மட்டுமே தீர்மானங்கள் எடுக்கப்படும் சூழல் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எச்சரித்தார்.


