கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரியகுமாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வேட்பாளரை ஆதரித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் ஒரு வினோதமான தேர்தல் என்றும் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மோடி அரசாங்கம் செய்த சதி திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று தொகுதி மறுசீரமைப்பை குறிப்பிட்ட அவர் தேர்தலுக்கு முன்பே பாஜக அதிமுக கூட்டணி இந்திய அளவில் தோற்றுப் போய்விட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மோடி கோவைக்கு வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று கம்பீரமாக வரலாம் என்று நினைத்திருப்பார் அப்படி இருக்கும் பொழுது இன்று கோவைக்கு வருவாரா அல்லது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வாரா என்று தெரியவில்லை என்று விமர்சித்தார். மோடி படுதோல்வி அடைந்த முகத்துடன் தான் கோவைக்கு வருவார் என்றும் கூறினார். இந்திய வரலாற்றில் எப்பொழுதும் ஆளுகின்ற அரசு கொண்டு வரக்கூடிய அரசியல் தீர்மானம் தோற்றுப் போனது இல்லை ஆனால் இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்று உள்ளது என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி திரைப்படத்துறையில் வந்திருந்தார் என்றால் நடிகர் விஜய் எல்லாம் அவரிடம் தண்ணீர் குடிக்க வேண்டி இருந்திருக்கும் என்றும் மோடி பெரிய நடிகராக மாறி இருப்பார் என்றும் விமர்சித்த அவர் இன்றைய காலகட்டத்தில் அவர் அனைத்து வேடங்களையும் பிரதமர் போடுவார் என்று கூறினார்.
பாஜக கட்சி உருவாவதற்கு முன்பே எங்களுக்கு 33 சதவிகிதம் என்று குரல் எழுப்பிய இயக்கம் இடதுசாரிகள் என்றும் கூறினார். மேலும் தற்பொழுது மோடி கொண்டு வந்த அந்த மசோதாவிற்கு இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்த்து உள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களுடைய நோக்கம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதியை குறைப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று முழங்குகின்ற பொழுது எடப்பாடி பழனிச்சாமி மோடியின் கூட்டத்திற்கு காவடி தூக்குவதாகவும் நவீன அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர்களை மீண்டும் சேர்த்து பறந்து விரிந்த கூட்டணி என்று கூறுகிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை கூட்டணி சேர்ப்பதற்கு முன்பு என்னவெல்லாம் பேசினார் என்பதை மறக்க முடியாது என்றும் அதேபோன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தால் தூக்க மாட்டிக் கொள்வேன் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு வரக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி மேற்கொள்வதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மக்கள் தூக்கி எறிந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கினார்கள் இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக கூட வர முடியாது என்று தெரிவித்தார். மேலும் பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை எரிபொருள் விலை ஆகியவை உயர்ந்து விட்டதாகவும் அதற்கான மானியத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டதாக கூறினார்.
நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான நிதியை தர மறுக்கிறார் அதே சமயம் தமிழ்நாடு அரசு நிதி அளித்தாலும் அதனையும் மறுக்கிறார் என்று கூறிய அவர் இது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்தார் மேலும் நிர்மலா சீதாராமன் அதானி அம்பானி போன்றோர் வாங்கிய 20 லட்சம் கோடி கடனை கூட தள்ளுபடி செய்து அந்த சுமையை மக்கள் மீது திணித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கியின் சாவி அம்பானி அதானி ஆகியோர் கையில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சாத்தான்குளம் அப்பா மகன் மரணம் குறித்தும் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் கோவை மெட்ரோ போன்ற திட்டங்கள் எல்லாம் வந்ததா என்றும் கேள்வி எழுப்பினார்.
நாளை அரசு பள்ளிகளில் அவர்கள் மும்மொழித்திட்டத்தை திணிப்பார்கள், இரு மொழிக் கொள்கைக்கு சமாதி கட்டுவார்கள் இந்தி மொழியை கட்டாயப்படுத்துவார்கள் என்று தெரிவித்த அவர் நாம் இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசிய அவர், அண்ணாமலை பொறம்போக்குக்கு என்னதான் சொல்வது என்று கடுமையாக சுட்டிக்காட்டிய அவர் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கின்ற வரை உறவே வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவரால் தான் அண்ணாமலை மாநிலத் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் கையூட்டு பெறுகிறார்கள் என்று அண்ணாமலை கூறுவதாகவும் இந்தியாவில் உள்ள பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்றும் அப்படி இருக்கும் பொழுது யாராவது லஞ்சம் வாங்கிய வர் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அண்ணாமலை சான்றிதழ் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பெருமை வரப்போவதில்லை என்றார்.
எனவே இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அதற்காக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


