கோவை: பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்த திமுகவும் காங்கிரஸையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அண்ணாமலை, சட்டம்-ஒழுங்கு நிலைமை சிறப்பாக இருக்கும் தமிழகத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழக அரசியல் வரலாற்றில் இருண்ட காலமாக இருந்ததாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாகவும் கூறினார்.
மேலும், “எப்படியோ தப்பித்து இந்த ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.
மின்சாரம், குடிநீர், குப்பை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்றும் விமர்சித்தார்.
ஒரு மன்னனும் காவலனும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகத்தினால் ஏற்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்டால் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
சிறு, குறு தொழில்துறையினர் பல சிரமங்களை சந்தித்து வருவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாற்றப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
தமிழகத்தில் வளர்ச்சி சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் தொழில் வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக அரசு மக்களிடமிருந்து அதிக வரி வசூலித்து ஆட்சி நடத்துகிறது என்றும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வருமானத்தை உயர்த்தி மக்களுக்கு சுமையில்லா ஆட்சி வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “பெண்கள் அரசியலில் அதிகமாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஆனால் திமுகவும் காங்கிரஸும் அதற்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனவே வருகிற 23ஆம் தேதி அவர்களை தோற்கடிக்க வேண்டும்” என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.


