கோவை: கிரிக்கெட்டில் கடைசி இரண்டு ஓவர்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் இந்த இரண்டு நாட்களும் மிகவும் முக்கியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய கே.ஆர். ஜெயராம், அண்ணாமலையை வருங்கால மத்திய அமைச்சர் எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் போதைப்பொருள், கஞ்சா மற்றும் பாலியல் தொல்லைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். டபுள் இன்ஜின் அரசை உருவாக்குவதற்காக ஆந்திரப் பிரதேச முதல்வரும் தமிழகத்திற்கு வந்து திமுக எதிராக கோஷமிட்டதாக கூறினார்.
மேலும், மத்திய அரசுடன் ஆந்திர அரசு இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், நாமும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் பெற முடியும் என்றும் தெரிவித்தார். குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், சாதாரண மனிதரும் ஜனாதிபதியாக உயர முடியும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஒரு நிமிடம் நினைத்தாலே போதும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் வாக்கு கேட்க வருகிறது” என்று விமர்சித்தார்.
மேலும், “தமிழகத்தில் பல பிரச்சனைகளுக்கு முதல்வர் மற்றும் அவரது நிர்வாகமே காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
கோவை வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், “மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் கோவையில் இதுவரை ஐந்து ஏக்கர் நிலம் கூட வழங்கப்படவில்லை. இதனால் வளர்ச்சி தடைபட்டுள்ளது” என்றார்.
“இந்தியாவின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாக கோவை உள்ளது. இங்கு தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
“மத்திய அரசில் மோடி உள்ளார்; மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இறுதியாக, “T20 கிரிக்கெட்டில் கடைசி இரண்டு ஓவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும். அதுபோல தேர்தலுக்கு முன்பான இந்த இரண்டு நாட்களும் மிகவும் முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.


