கோவை:கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கடந்த 14.02.2020 அன்று போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பொள்ளாச்சி சாலை மயிலேறிபாளையம் செல்லும் வழியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முரண்பட்ட பதில்கள் அளித்ததால், போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தாம்பெட்டமின், LSD வகையைச் சேர்ந்த போதைப்பொருள் தடவிய 10 ஸ்டாம்புகள் மற்றும் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பில்ஜூலால் (22), பாலக்காடு கல்லடைப்பைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் (22), கோழிக்கோடு எடச்சேரியைச் சேர்ந்த சாரங் (22) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், போதைப்பொருள் விற்ற குற்றத்திற்காக மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து நீதிபதி ராஜலிங்கம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார்.


