கோவை: கோவை திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை தெற்கு தொகுதி திமுக, அ.தி.மு.க. வேட்பாளர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டி வலியுறுத்தியும், தேர்தல் நாளன்று சில நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றும் கூறி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் 5 ஆயிரம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 2,500 ரூபாயும் ஓட்டுக்காக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். எனவே இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். வெக்கமே இல்லாமல் இதைச் சொல்கிறார். நாங்கள் எளிய பிள்ளைகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இப்படியே சென்றால் பணம் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜபு நிஷா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் இதனை நடைமுறைப்படுத்துவதில்லை. மேலும், கோவையில் உள்ள பெரிய உணவு நிறுவன ஹோட்டல்களான அன்னபூர்ணா மற்றும் ஆனந்தாஸ் ஆகிய ஹோட்டல்களும் இதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், உணவு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு ஒதுக்கி, அந்த நேரத்தில் சென்று ஓட்டளித்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த காலத்திற்குள் ஒரு வாக்காளர் சென்று வாக்களித்து விட்டு வர முடியாது. மேலும், மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடையும் நிலையில், ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களும் ஓட்டுப்போட முடியாத நிலை உருவாகும். எனவே இந்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


