கோவை:தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மே ஒன்றாம் தேதி வருடம் தோறும் தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு பகுதிகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது இதில் சிபிஐ(எம்), சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சிவப்பு நிற உடை அணிந்து செஞ்சட்டை பேரணி மேற்கொண்டனர். சித்தாபுதூர் பகுதியில் துவங்கிய இந்த பேரணி லட்சுமி மில் பகுதியில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி மேற்கொண்டனர் மேலும் இந்த பேரணியில் தொழிலாளர் சட்டங்கள் நான்கினை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஐடியு மாநில பொதுச் செயலாளர் கண்ணன், மே தின தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் 8 மணி நேர வேலை என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணி மேற்கொள்வதாக தெரிவித்தார். எட்டு மணி நேரத்திற்கு மேல் தொழிலாளியை வேலை வாங்குவது என்பது சட்டவிரோதம் என்ற அவர் அவ்வாறு வேலை வாங்கக் கூடிய நிறுவனங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
1986 சிக்காகோ பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூறும் விதமாகவும் மே தின நிகழ்வுகளை கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைக் கொண்டு இயங்கக்கூடிய நிறுவனங்கள் அவர்கள் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நேரத்தில் வேலைப்பளு என்பதும் அதிகரித்துள்ளதாகவும் இந்த வேலைப்பளு குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எட்டு மணி நேரம் செய்யக்கூடிய வேலையை வேலையாட்கள் ஆறு மணி நேரத்திலேயே முடித்து விடுவதாகவும் அதற்கு மேல் செய்யக்கூடிய வேலைகள் அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைவதாக கூறினார். மேலும் தற்பொழுது தொழிலாளர்களுக்கு வரக்கூடிய இதய நோய்கள் தோல்வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வேலை சுமையினால் தான் வருவதாக ஆய்வுகள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது கிடைப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை டெல்லி நோய்டா போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் சந்தித்து வருவதாகவும் வேலையாட்கள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவதாகவும் எனவே அதற்கான சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



