கோவை: கோவை சின்னசாமி நாயுடு சாலை, நியூ சித்தாபூரியில் சக்ஷம் அமைப்பின் கோவை மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படும் சக்ஷம் அமைப்பின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டதை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு சமூக மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு அதிகரித்தல், சமூக சேவைகள் விரிவாக்கம் மற்றும் பல புதிய உதவி முயற்சிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த அமைப்பின் கீழ் இயங்கும் ஈ-சேவை மையம் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு, பல சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஓசோன் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனர் மகேஷ் ராஜகோபால், வைஷ்யான் டிரஸ்ட் நிறுவனர் சுரபி கார்த்திக், கோவை மாநகர சங்கச்சாலக் ஆர்.எஸ்.எஸ். எம்.ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார், கிருஷ்ணா டெக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பி. கோபாலகிருஷ்ணன், CODCEA தலைவர் எர். ஜெயராமன், சமூகக் குழு தலைவர் எர். லோகநாதன், ஸ்ருதியாலய கலா கேந்திரா நிறுவனர் வி.பிரியங்கா, உளவியல் நிபுணர் டாக்டர் எஸ். சங்கீதா, உடற்பயிற்சி நிபுணர் பிரியா ஹேமந்த், ஸ்வதர்மா ஃபவுண்டேஷன் நிறுவனர் கே. அருணா, கடல் பொறியாளர் பி.என்.சந்தோஷ் மற்றும் CRIC, கோவை மண்டல செயலாளர் எர். செஅர்ஜுன் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசுகையில், வைஷ்யான் டிரஸ்ட் நிறுவனர் சுரபி கார்த்திக், “சக்ஷம் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த அமைப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்,” என்றார்.
அதேபோல், ஓசோன் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனர் திரு மகேஷ் ராஜகோபால், “ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் மாற்றுத்திறனை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். எனவே இப்படிப்பட்ட அமைப்புகள் அனைவருக்கும் அவசியமானவை. மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சக்ஷம் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் கலந்து கொண்டு அமைப்பின் பணிகளை பாராட்டினர். இறுதியில், சக்ஷம் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் U.கண்ணன் நன்றி உரையாற்றினார்.



