கோவை: கோவையில் நடைபெற்ற TACTV கூட்டத்தில், கேபிள் டிவி துறைக்கான புதிய நலத்திட்டங்களை அரசு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் சார்பில் கோவையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசு கேபிள் டிவி துறைக்கான புதிய நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் அசோகன், மாநில பொதுச் செயலாளர் வி.பாலாஜி, மாநில பொருளாளர் பிரபாகரன், மாநில ஆலோசகர் வி.செல்வகுமார் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலுமிருந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான டிஜிட்டல் கேபிள் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு பைபர் நெட் நிறுவனத்தின் மூலம் அதிவேக இணைய சேவை, OTT வசதி, IPTV மற்றும் ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் இணைப்புகளை கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், முதலமைச்சர் அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு கேபிள் டிவி துறையினர் முழு ஒத்துழைப்புடன் கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



