கோவை: கோவை இருகூர் (Irugur) காந்தி நகர், சௌடேஸ்வரி நகர் ரயில்வே கேட் பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினாரா? அல்லது விளையாடச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததா? என்பது குறித்து உடனடி தகவல் தெரியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவன் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவரது பெற்றோர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து, “இந்த சிறுவனை யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்” என போலீசார் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் முகவரி மற்றும் பெற்றோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



