கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கைப்பேசி ஆகியவற்றை வழிப்பறி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டை காண்பித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பன்னிமடையில் தனக்கு சொந்தமான இடம் உள்ளது என்றும் அதை விற்பனை செய்ய வேண்டும் என கூறி பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது பேபி தனது நண்பர்களான மோகன கிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1-ம் தேதி மாலை அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சிவாகுமார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு மூன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


