கோவை: தமிழக பக்தர்களுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும் என பேரூர் ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமர்நாத் செல்லும் தமிழக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரி துணைக் குடியரசுத் தலைவரிடம் பேரூர் ஆதீனம் மனு அளித்துள்ளார்.
பேரூர் ஆதீனம் 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ஆன்மிக மையமாக திகழ்ந்து வருகிறது. ஆதீனத்தின் சார்பில் தினந்தோறும் அடியார்களுக்கு அமுது செய்வித்தல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வட இந்தியாவில் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை வழங்க அனுமதி கோரி இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளதாக பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமர்நாத் யாத்திரைக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை கருத்தில் கொண்டு, இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
அதற்கான அனுமதி கிடைத்தால், பஹல்காம் அருகே பக்தர்கள் பயன்பெறும் வகையில் உணவு வழங்கும் மையம் அமைக்கப்படும். இதன் மூலம் தென்னிந்திய பக்தர்கள் தங்களுக்கு பழக்கமான சைவ உணவுகளை எளிதாக பெற முடியும். மேலும், ஆன்மிக சேவையுடன் மனிதநேய சேவையையும் இணைத்து செயல்படுவது பேரூர் ஆதீனத்தின் நோக்கமாகும் என மருதாசல அடிகளார் தெரிவித்தார்.


