கோவை: மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கூலித்தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாபு (52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா (44). வின்சென்ட் பாபுவிற்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல், தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி லதா கண்டித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வின்சென்ட் பாபு மது குடித்து வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த வின்சென்ட் பாபு, வீட்டில் இருந்த ஆசிடை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லதா, அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் வின்சென்ட் பாபுவிற்கு கடுமையான தொண்டை வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


