கோவை: கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியச் சார்பதிவாளர் அலுவலகங்களை (Sub-Registrar Offices) குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். முகூர்த்த நாளான இன்று, பத்திரப் பதிவுக்காகப் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய வேளையில், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) மூலமாகக் கடுமையான லஞ்சப் பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் மற்றும் ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதன் அடிப்படையில், இன்று மாலையில் தனிப்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராஜசேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் மாலை 4 மணி அளவில் அதிரடியாகப் புகுந்தனர்.
இன்று தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் ஆனந்தன் குமார் விடுப்பில் (Leave) சென்று இருந்ததால், அலுவலகத்தின் தலைமை எழுத்தர் (Head Clerk) பகவதி என்பவர் பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்டு வந்தார்.
அதிகாரிகள் உள்ளே நுழைந்த உடனே வெளி நுழைவு வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன.
இன்று முகூர்த்த நாள் என்பதால் 100-க்கும் மேற்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டு இருந்தன. சோதனையின் போது சுமார் 60 டோக்கன்களுக்கான பணிகள் முடிந்து இருந்தன.
அங்கு வந்து இருந்த பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, ஒருபுறம் அதிகாரிகள் சோதனையிட்டாலும், மறுபுறம் மீதமுள்ள டோக்கன்களுக்கான பத்திரப் பதிவு பணிகள் தொய்வின்றி நடைபெற அனுமதிக்கப்பட்டது.
இதேபோல், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் இயங்கி வரும் காந்திபுரம் (சரவணம்பட்டி) சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம் மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையைத் தொடங்கினர்.
அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நுழைந்ததும் கதவுகள் அடைக்கப்பட்டு, ஊழியர்களின் மேசைகள், ஆவணங்கள் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் குறித்து சோதனையிடப்பட்டது.
முகூர்த்த நாளான இன்று ஆவணங்களைச் சரிபார்க்கும் சாக்கில் வாடிக்கையாளர்களிடம் இருந்து லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதா ? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.


