கோவை: கோயிலுக்கு செல்ல வேண்டும் என கூறிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (47). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (43). குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஸ்ரீதேவி நட்டார்கொண்டம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயிலுக்குச் செல்லும் நோக்கில் மகாலட்சுமி கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வந்துள்ளார். கடந்த 17-ம் தேதி இரவு, ஆறுமுகம் தனது மகனுடன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மறுநாள் நட்டார்கொண்டம்மன் கோயிலுக்கு செல்ல இருப்பதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால், மகனுக்கு தேர்வு இருந்ததால் தேர்வு முடிந்த பின்னரே செல்ல முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, அன்று இரவு மகாலட்சுமி வீட்டின் வெளியே வந்து சாமியாடுவது போல் நடந்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர்.
மறுநாள் அதிகாலை ஆறுமுகம் எழுந்து பார்த்தபோது, மகாலட்சுமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ பணியாளர்கள், மகாலட்சுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த சிங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


