கோவை: சுகுணா PIP பள்ளியிப் நடைபெற்ற மோசடி தொடர்பான விசாரணைக்காக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
காளப்பட்டி பகுதியில் சுகுணா பிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியும், FIITJEE என்ற பயிற்சி நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு NEET/JEE பயிற்சி அளிப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பயிற்சியில் சேர ரூ.1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும், பயிற்சியின் முடிவில் அந்தப் பணம் திரும வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி 250க்கும் மேற்பட்ட பெற்றோர் தலா ரூ.1 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்தினர்.
ஆனால், பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தபடி அந்த வைப்புத் தொகையை பெற்றோர்களுக்கு திரும்பச் செலுத்தவில்லை.
இதனிடையே வட்டமலைபாளையத்தை சேர்ந்த விக்ரம், தனது மகனை 2023-ல் இந்த திட்டத்தில் சேர்க்கும்போது ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்தியதாகவும், படிப்பு முடிந்த 60 நாட்களுக்குள் அந்த தொகை திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் 2025-ல் படிப்பு முடிந்த பிறகும் பணம் வழங்கப்படவில்லை என்றும், பலமுறை கேட்டபின் FIITJEE நிறுவனத்தை அணுகுமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பல பெற்றோர்கள் இணைந்து புகார் அளித்த நிலையில், பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சுகுணா PIP பள்ளி தலைவர் லட்சுமிநாராயணசாமி மற்றும் FIITJEE நிறுவனர் தினேஷ்குமார் கோயல் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


