கோவை: கோவை அருகே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 60 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது தோழிகளுடன் விராலியூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அருணன் (60) என்பவரின் மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரை நலம் விசாரிப்பதற்காக நேற்று காலை இளம்பெண் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் இளம்பெண்ணிடம் அருணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன் மயங்கி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



