கோவை: மனைவியை மதுவில் விஷம் வைத்துக் கொன்று சடலத்தை மறைத்த கணவன் உள்பட 3 பேர் கைது
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை விஷம் வைத்துக் கொன்ற கணவர் மற்றும் அவரது தந்தை, சித்தப்பா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார் மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கருமத்தம்பட்டி அடுத்த மாதாப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். கடந்த 23-ம் தேதி மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவியைக் கொலை செய்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆனந்தகுமாரின் தந்தை ஆறுமுகம் மற்றும் சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் உதவியுடன், சடலத்தை ஒரு பையில் மூட்டை கட்டி மீன்பிடி வலையால் மூடி மறைத்து எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், ஆனந்தகுமார், தந்தை ஆறுமுகம், சித்தப்பா சுப்பிரமணி ஆகிய மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.



