கோவை: கோவையில் கோழிகளை வேட்டையாடி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் திருவள்ளுவர் நகர்- சோமையனூர் பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை சிறுத்தை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான மாங்கரை, தடாகம், சோமையனூர் திருவள்ளுவர் நகர் பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் நகர், சோமையனூர் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள் கோழிகள், ஆடுகளை வேட்டையாடி சென்றன. வனத்துறை தரப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை கண்காணித்து பிடிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிறுத்தை பிடிப்படவில்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. திருவள்ளுவர் நகர்- சோமையனூர் க்கு இடைப்பட்ட பகுதியில் மலையை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை சிறுத்தை கவ்வி சென்றுள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை தரப்பில் சிறுத்தையை கண்காணிக்க கேமராக்களை பொருத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை விரைந்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



