கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, பின்னர் ரம்ஜான் கொண்டாடுவது வழக்கம். ரமலான் மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், நரக வாசல்கள் மூடப்பட்டு சொர்க்கவாசல்கள் திறக்கப்படும் நன்மைகள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
எனவே இம்மாதம் முழுவதும் நோன்பு கடைபிடித்து, பின்னர் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதனிடையே, நோன்பை முடித்த மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
Advertisement


ரம்ஜானை முன்னிட்டு கோவை கரும்பு கடை அருகே உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் புத்தாடைகள் அணிந்து, பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

தரையில் அமர்ந்து தொழுகை நடத்த முடியாதவர்களுக்கென நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. தொழுகைக்குப் பின் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நல்லிணக்கம்

கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் ரம்ஜான் தொழுகையை முடித்து பின், மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
கோவில் நிர்வாகிகளும், பக்தர்களுக்கும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து இந்து கடவுள்களின் படங்களை வழங்கினர்.

பிரியாணி
ரம்ஜான் பண்டிகை என்றாலே நினைவிற்கு வரும் பொருட்களில் ஒன்று பிரியாணி. ரம்ஜானை முன்னிட்டு கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சமூக குழுவினர் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, கோட்டைமேடு வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில், 6வது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தூய்மை பணியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
