கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செங்குட்டை நாராணாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் (46) என்பவர் கடந்த ஜூலை 25ஆம் தேதி மாலை நடந்த சாலை விபத்தில் கடுமையான காயம் அடைந்தார்.
மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தர்மருக்கு மூளைச்சாவு (Brain Death) ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர தர்மரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.
பின்னர் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தர்மரின் உடல் உறுப்புகள் ஜூலை 29ஆம் தேதி அன்று முறையாகப் பெறப்பட்டன.
அதன்படி, ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒரு கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் மொத்தம் 5 நபர்களுக்கு புதிய வாழ்க்கை மற்றும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்த தர்மர் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், இருதய மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அரசு மரியாதை செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.




