கோவை: சாலையில் கொட்டிய டீசலில் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
கோவையில் கான்கிரீட் மிக்சர் வண்டியில் இருந்து டீசல் கொட்டியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் வழுக்கி விழுந்தனர்.
கோவை, ராமநாதபுரம் ஆல் இந்தியா ரேடியோ அருகே கான்கிரீட் கலவை இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து டீசல் சாலையில் கொட்டியதால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அந்த வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் இருந்து டீசல் கசிந்து சாலையில் லிட்டர் கணக்கில் கொட்டத் தொடங்கி உள்ளது. அந்த சாலை முழுவதும் டீசல் பரவி எண்ணெய் பசையாக மாறியது. அதனை அறியாத பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வண்டியை பிரேக் பிடித்த போது நிலைதடுமாறி வழுக்கி விழுந்தனர்.
இதில் அடுத்தடுத்து வந்த பல இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்ததில், பயணித்த வாகன ஓட்டிகளுக்குக் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் திடீரெனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நேரிட்டதை உணர்ந்த கான்கிரீட் கலவை நிறுவனத்தின் ஊழியர்கள், உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தினர்.
சாலையில் டீசல் கொட்டிய பகுதியில் மண்ணைக் கொட்டி சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


