கோவை: ஆவின் பூத்திலும் பால் விலை உயர்த்தப்படுகிறது.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 2,30,000 லிட்டர் பால் மற்றும் பால் உபபொருட்கள் 650 சில்லறை பால் முகவர்கள் மூலம் கோவை மாவட்ட மக்களின் தேவைக்காக தினசரி விற்பனை செய்யப்படுகிறது.
05.03.2026 அன்று கோவை மாவட்ட நுகர்வோர் மற்றும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், முகவர்கள் எளிதாக பால் மற்றும் பால் உபபொருட்கள் தேவைபட்டியலை உறுதி செய்யவும், அதற்கான தொகையினை எளிதாக ஆவின் நிறுவனத்திற்கு தங்களது இருப்பிடத்திலிருந்து செலுத்தும் பொருட்டும் மற்றும் பால் விநியோக வாகனங்களின் இயக்கத்தை எளிதில் கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பிரத்தியேக ஆவின் விற்பனை பிரிவு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பால் முகர்வோர்களுக்கு தங்குதடையின்றி பால் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு கீழ்கண்ட நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் 01.07.2026 முதல் அமுல் படுத்தப்பட உள்ளது. நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி கோவை மாவட்ட நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் மாதாந்திர பால் அட்டை பிரதி மாதம் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் பால் அட்டைக்கான தொகையினை கைபேசி செயலி மூலம் மட்டுமே செலுத்தி பெற்றுக்கொள்ளவும் ஒன்றியத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு நுகர்வோர்களுக்கு மாதாந்திர பால் அட்டை தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.00 தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதை நிறுத்தம் செய்து மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 01.07.2026 முதல் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே (MRP) விற்பனை செய்யப்படும்.
ஒன்றிய முகவர்கள் அனைவரும் 01.07.2026 முதல் பால் தேவை பட்டியல் பாக்கெட் கணக்கிற்கு மாற்றாக பால் பெட்டிகள் அடிப்படையில் (ஒரு பெட்டி 12லிட்டர்) தேவைப்பட்டியல் வழங்கப்படும்.
கோவை மாவட்ட நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்யும் பொருட்டு, அனைத்து பால் முகவர்களும் தினசரி காலை மற்றும் மாலை வேலைக்கான தேவைப்பட்டியலை முந்தைய தினம் மாலை 4.00 மணிக்குள் பணம் செலுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
01.07.2026 முதல் முகவர்களுக்கு தரகுத்தொகை (Milk Commission) கழித்து பணம் செலுத்தும் வசதி அமுல்படுத்தப்படும்.
இதனை தொடர்ந்து அச்செயலியின் மூலம் எதிர்வரும் 01.07.2026 முதல் அனைத்து முகவர்களும் தினசரி தேவைபட்டியல் மற்றும் அதற்கான தொகையினை ஆவின் விற்பனை பிரிவு செயலியின் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
எனவே, முகவர்கள் அனைவரும் 01.07.2026 தேதி முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விற்பனை பிரிவு மென்பொருள் செயலி மூலமாக தங்களது பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவைபட்டியலை உறுதிசெய்து, செயலி மூலம் தொகையினை செலுத்தி தங்களது தேவைபட்டியலை பதிவிடுமாறும் அதற்கு ஏற்ப தங்களுடைய வங்கி கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ள தேவையான முன் ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு ஆவின் நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முகவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆவின் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



