கோவை : கோவையில் கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற பெண் மாயமான சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் காந்தன் (44). இவரது மனைவி வெற்றிச்செல்வி (38). நேற்று காலை, உப்பிலிபாளையத்தில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
மதியத்திற்குப் பிறகும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த காந்தன், பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். பின்னர் உப்பிலிபாளையம் முருகன் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, வெற்றிச்செல்வி சென்ற இருசக்கர வாகனம் மட்டும் சைடு லாக் செய்யப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அங்கு இல்லை.
இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும், வெற்றிச்செல்வி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் காந்தன், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



