கோவை : அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ஓய்வுபெற்ற போலீஸ்காரரிடம் ரூ.3 லட்சம் முதலீட்டு மோசடி செய்ததாக தம்பதி மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் பட்டணம் ரோடு, மேகரலி வீதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (61). ஓய்வுபெற்ற போலீஸ்காரரான இவரிடம், அவரது நண்பர் செல்வக்குமார், பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் செயல்பட்டு வந்த ஆர்.வி. பேப்டெக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பார்த்திபன் அந்த நிறுவன அலுவலகத்திற்குச் சென்று, நிறுவனத்தை நடத்தி வந்த விணுவல்சன் மற்றும் அவரது மனைவி ரிதுவல்சனை சந்தித்தார்.
அப்போது, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 18 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும், வாரந்தோறும் ரூ.4,500 வீதம் ஆறு மாதங்கள் வட்டி வழங்கப்பட்டு, அதன் பின்னர் முதலீட்டு தொகையும் திருப்பி வழங்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என நம்பிக்கை அளித்துள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பிய பார்த்திபன், கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். ஆரம்பத்தில், அவரது வங்கிக் கணக்கில் வட்டித் தொகையாக மொத்தம் ரூ.97,910 வரை வரவு வைக்கப்பட்டது.
இதனால் நம்பிக்கை அடைந்த அவர், தனது மகள் பெயரில் மேலும் ரூ.1 லட்சமும், மகன் பெயரில் மற்றொரு ரூ.1 லட்சமும் முதலீடு செய்தார். மகள் பெயரில் முதலீடு செய்த தொகைக்கு ரூ.42,300 வட்டியும், மகன் பெயரில் முதலீடு செய்த தொகைக்கு ரூ.9,000 வட்டியும் கிடைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதன் பின்னர் மூவருக்கும் வட்டித் தொகை வருவது திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நிறுவன அலுவலகத்திற்குச் சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது. மேலும், இதே நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்திருப்பதாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து பார்த்திபன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நிறுவன இயக்குநர்களான விணுவல்சன் மற்றும் ரிதுவல்சன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த தம்பதி எத்தனை பேரிடம் எவ்வளவு தொகையை மோசடி செய்துள்ளனர் என்பது குறித்தும், தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


