கோவை: கோவையில் ஆவின் பால் முகவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் முகவர்கள் உள்ளனர். அவர்கள் நாள்தோறும் பால்பாக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறுவதற்கும் பணத்தொகையை செலுத்துவதற்கும் பிரத்தியேகமாக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த சில வருடங்களாகவே அந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் அண்மையில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தி அதன் மூலம் எத்தனை பால் பாக்கெட்டுகள் தேவைப்படுகிறது அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு அந்த புதிய செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. Aavin Coimbatore என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் குளறுபடிகள் அதில் இருப்பதாகவும் பால் முகவர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.

பால் தேவைக்கான எண்ணிக்கையை பதிவு செய்து பணத்தை செலுத்தினால் அந்த எண்ணிக்கையிலான பால்கள் தங்களுக்கு கிடைக்க பெறுவதில்லை என்றும் கமிஷன் வருவதிலும் பல்வேறு குளறுபடிகளும் சிக்கல்களும் நிலவுவதாக தெரிவித்து வந்தனர். சில தினங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ பால் பாக்கெட்டுகள் தேவைப்பட்டால் அதனை Edit செய்து கட்டணத்தை மீண்டும் செலுத்த இயலாத நிலை இருப்பதாகவும் இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தடாகம் சாலை பால் கம்பெனி பகுதியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பால் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அங்கு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஒரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வராததால் திடீரென தடாகம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர்.
உடனடியாக ஆவின் பொது மேலாளர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வரும் இதில் கவனம் செலுத்தி தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் பொழுது கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளர் சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அதற்கு ஆவின் முகவர்கள் சங்கத்தை சார்ந்த சிலரும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பேசிய பால் முகவர்கள், தற்பொழுது உள்ள புதிய செயலியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் பால் எண்ணிக்கையை கணக்கிட்டு பணம் செலுத்தும் பட்சத்தில் அதற்கான பால் பாக்கெட்டுகள் தங்களுக்கு கிடைக்க பெறுவதில்லை என்று தெரிவித்தனர். இது குறித்த மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால் செயலியை மாற்றுவதை விட்டுவிட்டு தங்களது தலையெழுத்தை மாற்றுவதாக ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும் இந்த புதிய செயலியில் எண்ணிக்கையை குறிப்பிட்டு பால் பாக்கெட்டுகள் தங்களுக்கு கிடைக்கப்படாத பட்சத்தில் ஆவின் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதில் சில சமயங்களில் சங்கடங்கள் நிலவுவதாகவும் பால் பாக்கெட் சேதமடைந்து வந்தால் அதற்குரிய பணமும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினர். மேலும் ஆவின் அட்டைதாரர்களுக்கு பால்வினியோகம் செய்யும் பொழுது எந்த ஒரு கமிஷனும் தங்களுக்கு இல்லை என்றும் நாங்கள் இலவசமாக சேவை செய்ய வரவில்லை என்றும் தெரிவித்தனர்.


