கோவை : கோவையில் புறா பந்தயத்தில் ஏற்பட்ட பணப் பரிவர்த்தனை தகராறு கோஷ்டி மோதலாக மாறிய சம்பவத்தில், இளைஞரை இரும்புக் கம்பி மற்றும் மரக்கட்டைகளால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பேத் விமல் ராஜ் (31), கடந்த 5 ஆண்டுகளாக கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் வசித்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மூலம் சோமையம்பாளையத்தைச் சேர்ந்த அஜித், விக்னேஷ் (எ) விக்கி மற்றும் காதர் (எ) காஜா மைதீன் ஆகியோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களாக புறா பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பந்தயத்தில் நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தனியார் திருமண மண்டப மேலாளரான பூபதி (எ) அன்னக்கிளிக்கும், அம்பேத் விமல் ராஜுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தன்று வடவள்ளி அடுத்த இடையர்பாளையம் பகுதியில் குணசேகர் என்பவரது வீட்டின் முன்பு அம்பேத் விமல் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பூபதி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதில் பூபதி தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அம்பேத் விமல் ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பூபதியை தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பூபதி தனது தம்பியுடன் கோவை நீலியம்மன் நகர் பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த குணா (29), அம்பேத் விமல் ராஜ், விக்னேஷ் (32), காதர் மைதீன் (29) ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இரும்புக் கம்பி மற்றும் மரக்கட்டைகளால் பூபதியை சரமாரியாக தாக்கியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குணா, அம்பேத் விமல் ராஜ், விக்னேஷ் மற்றும் காதர் மைதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


