கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயதான கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1ம்தேதி சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூளைச்சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் மருத்துவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனைப்படி அவரது ஒரு சிறுநீரகம் மற்றும் 2 கருவிழிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


