கோவை: கோவையில் விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் ஆறு கோடி தங்கம், வெள்ளிக் கட்டிகளுடன் மாயமான வியாபாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரப் பகுதியில் ஏராளமான நகை பட்டறைகள் உள்ளன. இங்கு தங்க கட்டிகளை வாங்கி நகையாக செய்து வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.
இந்நிலையில் கோவை பெரிய கடை வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகியோர் சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை விற்பனை செய்யும் மையத்தை தொடங்கினர்.
பின்னர் அவர்கள் கோவையில் உள்ள நகை வியாபாரிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் அவர்களிடம் வியாபாரிகள் பலர் தங்க, வெள்ளி கட்டிகளை விற்பனை செய்வதற்காக கொடுத்தனர். அதன்படி அவர்கள் இரண்டு பேரும் வியாபாரிகளிடம் இருந்து 4 கிலோ தங்க கட்டிகள், 6 கிலோ வெள்ளி கட்டிகளை விற்பனை செய்து தருவதாக வாங்கினர்.
இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரும் நடத்தி வந்த மையம் பூட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் விசாரித்த போது அவர்கள் இரண்டு பேரும் தங்க, வெள்ளி கட்டிகளுடன் மாயமானது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 6 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து தங்க, வெள்ளி கட்டிகளுடன் மாயமான விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்போன் எண்களை வைத்து விசாரணை தீவிர படுத்தினர். இதில் கோவையில் உள்ள ஒரு வீட்டில் விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகிய இரண்டு பேரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனே அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்கள் 4 கிலோ தங்க கட்டிகள் ஆறு கிலோ வெள்ளிக் கட்டியை யாரிடம் கொடுத்தனர். இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.


