கோவை: அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சி கூறுவதற்கு மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்து ஆஜராகி உள்ளார். கூடுதல் அரசு வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணையும் நடத்த முடியவில்லை என தெரிகிறது.
அரசு தரப்பு தவறால் இது ஏற்பட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகை மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டுமென கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் ஜூன் 30ம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில், கோவை நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் தற்போது வரை இன்னும் நியமிக்கப்படவில்லை.


