கோவை: கோவையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் துணிப்பைகள் தைத்து உலக சாதனை படைத்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நெகிழி பயன்பாட்டுக்கு மாற்றாக துணிப்பைகளை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்பட்டது.
அதேபோல், பெண்களின் சுயதொழில் மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்த உலக சாதனை முயற்சியில் சமூகத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே அரங்கில், ஒரே நேரத்தில் ஊசி மற்றும் நூலை பயன்படுத்தி துணிப்பைகளை தைத்தனர்.
இந்த சாதனை, “World Wonders Book of Records” அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.


