கோவை: கோவையில் சீட்டுப் பணத்தை திரும்பக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், தந்தையை காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணை மரக்கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குறிச்சி, ஈச்சனாரி அருகே உள்ள பிள்ளையார்புரம் நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், தனது பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் நடத்தப்பட்ட தீபாவளி மற்றும் மாதாந்திர சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளார்.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு, தனக்கு வர வேண்டிய சீட்டுப் பணத்தை முருகன் கேட்டபோது, அவருக்கும் சீட்டு நடத்திய தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
Also Read: Coimbatore power cut : ஜூலை 17-ல் கோவையில் மின் தடை
அப்போது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா என்ற இளங்கேஸ்வரன், முருகனைத் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதைக் கண்ட முருகனின் மகள் உன்னிமயா (18), சண்டையை தடுக்க இருவருக்கும் இடையே சென்றுள்ளார். அவருடன் உன்னிமயாவின் தாயாரும் சண்டையை விலக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, முதலில் உன்னிமயாவின் தாயாரை தள்ளிவிட்டு, முருகனை மீண்டும் தாக்க முற்பட்டார். அதை உன்னிமயா தடுத்தபோது, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உன்னிமயா பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த உன்னிமயாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உன்னிமயா சுந்தராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதல் நடத்தியது ஜீவா என்ற இளங்கேஸ்வரன் என்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





