கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 8 வயது பெண் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட முடிவில், செரிமானக் கோளாறே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட தனியார் காடுகள் பிரிவில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மற்றும் என்.சி.எஃப். (NCF) அமைப்பின் தன்னார்வலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் யானையின் உடல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவி கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் யானை உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்வதற்காக உடல் உறுப்புகள் மற்றும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
Also Read: உலா வரும் காட்டுப் பன்றிகள்… அச்சத்தில் வடவள்ளி மக்கள்- video
உடற்கூறு ஆய்வு நிறைவடைந்த பின்னர், யானையின் உடல் அதே வனப்பகுதியில் வனத்துறை விதிமுறைகளின்படி புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





