கோவை: வடவள்ளி அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டிகளுடன் காட்டுப் பன்றிகள் குடியிருப்புப் பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோவை புறநகர் பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், வடவள்ளி மற்றும் தடாகம் அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாக சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றித் திரியும் காட்சிகள் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் காட்டுப் பன்றிகள் அடிக்கடி தென்படுவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள், வேலை முடித்து வீடு திரும்பும் பொதுமக்கள் என அனைவரும் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: Pollachi Female Elephant Found Dead; Digestive Disorder Suspected
எனவே, காட்டுப் பன்றிகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டுதல், அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை வனத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.





