கோவை: நடிகர் ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கங்கா மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் உள்ள TFCC (Triangular Fibrocartilage Complex) பகுதியில் நீண்டகாலமாக சிக்கலான காயம் இருந்து வந்துள்ளது.
கை மணிக்கட்டின் நிலைத்தன்மை மற்றும் இயக்கத்திற்கு முக்கியமான இந்த தசைநார் மற்றும் குருத்தெலும்பு அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் வகையில், ஜூலை 27-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ராம் சரண் தற்போது நலமாக இருந்து சிகிச்சைக்கு சிறப்பாக பதிலளித்து வருகிறார். மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், வியாழக்கிழமை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை கங்கா மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராஜசேகரன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராஜா சபாபதி மற்றும் டாக்டர் பிரவீன் பாரத்வாஜ் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் குழுவுடன் நடிகர் ராம் சரண் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கங்கா மருத்துவமனை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ராம் சரண் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





