கோவை: கோவை டி.வி.எஸ். நகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட பணத் தகராறில் பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மது அருந்தும்போது ஏற்பட்ட பணம் தொடர்பான தகராறில், பெயிண்டரை அடித்துக் கொலை செய்ததாக கூறப்படும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வேலாண்டிபாளையம் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்த முத்து ஆறுமுகம் என்ற பாலாஜி (42), பெயிண்டிங் கான்ட்ராக்டராக உள்ளார். இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) மற்றும் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறைச் சேர்ந்த குணசேகரன் (29) ஆகியோர் பெயிண்டர்களாக வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் கோவை டி.வி.எஸ். நகர், பெரியண்ணன் நகர் 1-வது வீதியில் உள்ள கட்டுமான இடத்தில் தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இரவு இருவரும் கட்டுமான இடத்தில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Also Read: கோவை குற்றாலம் மூடப்பட்டது…
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் அங்கிருந்த பி.வி.சி பைப்பால் குணசேகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குணசேகரன், வெங்கடேஷை பலமாக கீழே தள்ளியுள்ளார். இதில் வெங்கடேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
இதையடுத்து குணசேகரன் மாடிக்கு சென்று தூங்கியுள்ளார். மறுநாள் (28-ம் தேதி) காலை 7.40 மணியளவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக தொழிலாளி பூலு மண்டல், வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கான்ட்ராக்டர் பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி மற்றும் போலீசார், வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Also Read: ஜீவன் ரக்ஷா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குணசேகரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





