கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஆவின் நிறுவனத்தைச் சீரழிவில் இருந்து காப்பாற்றவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தருவதாகத் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்துள்ள நிலையில், மிகக் குறைவாக உயர்த்தினால் ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்ற முடியாது என்றனர். தனியார் பால் நிறுவனங்கள் வழங்கும் கொள்முதல் விலைக்குக் குறையாமல் ஆவின் பாலுக்கும் விலை உயர்த்தப்பட வேண்டும் என்றும் மேலும், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரசு தலையீடு இன்றி ஆவின் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தி, உண்மையான பால் உற்பத்தியாளர்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் என கேட்டுக்கொண்டனர்.





