கோவை: கோவை கணபதி, டி. பாலன் நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர் தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3-ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு இருவரும் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர், மூதாட்டியும் அவரது பேத்தியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்துள்ளார். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 கிராம் தங்கக் கம்மல், 2 கிராம் தங்க மோதிரம், ஒரு பவுன் தங்க டாலர் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை எழுந்த கஸ்தூரி, பீரோ திறந்திருந்ததையும், தங்க நகைகள் மற்றும் செல்போன் மாயமானதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதே மர்மநபர் துணிச்சலாக வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




