கோவை: ஒருதலைக் காதல் தோல்வி மற்றும் குடும்பச் சூழல் காரணமாக மன உளைச்சலில் இருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். திண்டுக்கல்லில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரது மனைவி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் பிரணவ் பத்மாதேவ் (18).
பிரணவ் பத்மாதேவ் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே இ.பி. காலனி, புதிய நகரில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, அவரது தந்தை மற்றும் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து கோவை வந்த அவரது தந்தை, மகனின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரணவ் பத்மாதேவ் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், அந்தக் காதல் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சில குடும்பப் பிரச்னைகள் காரணமாகவும் அவர் கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவர் தங்கியிருந்த அறையில் இருந்து உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





