கோவை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை மற்றும் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு, யானைகளின் ஓவியங்களோடு, அவற்றின் அவசியங்களை எடுத்துரைத்தவாறு பேரணியாகச் சென்றனர்.
யானைகள் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் வனத்துறை சார்பில் யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கோவை மாவட்ட வனத்துறை மற்றும் வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு சார்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உதவி வனப்பாதுகாவலர்விஜயகுமார், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிவ கணேஷ் ஆகியோ தொடங்கி வைத்த இந்த பேரணியில், வனத்துறையினர், வன ஆர்வலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, யானைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.
மேலும், யானைகள் உயிர் வாழ்தலின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்

இதுகுறித்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிவகணேஷ் கூறுகையில்,
“யானைகளை பாதுகாப்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதன் காரணமாகவே யானைகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது” என்றார்.





