கோவை: பீடம்பள்ளி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீடம்பள்ளி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மதுபானக் கடைக்கு வரும் சிலர், மது அருந்திவிட்டு சாலையோரங்களில் சுற்றித் திரிவதாகவும், இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், இரவு நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கடையின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களது கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் அப்பகுதியிலேயே அமர்ந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
VIDEO





