கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், டெங்கு தடுப்பு லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த கிழக்கு மண்டலத்திற்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இதையொட்டி, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மேயர் ரங்கநாயகி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 48 அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வெகுமதியுடன் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய 132 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், 2025-26 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் கடந்த ஆகஸ்ட் 3 முதல் 14-ம் தேதி வரை டெங்கு தடுப்பு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில், டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகளின் மூலம் மொத்தம் 11,84,259 தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கிழக்கு மண்டலத்திற்கு முதல் பரிசுக்கான வெற்றிக் கோப்பையும், மேற்கு மண்டலத்திற்கு இரண்டாம் பரிசுக்கான கோப்பையும் மேயர் மற்றும் கமிஷனர் வழங்கினர்.
மாநகராட்சியில் 2024-25 முதல் 2026-27 வரையிலான அரையாண்டு சொத்து வரியை நிலுவை மற்றும் அபராதம் இல்லாமல் முறையாக செலுத்திய நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மேயர் ரங்கநாயகி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அமைத்திருந்த சோலார் சிஸ்டம், ராக்கெட் மாடல், மூன் காலனி, வாட்டர் ராக்கெட் உள்ளிட்ட 13 வகையான அறிவியல் கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.
தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் என்சிசி பேன்ட் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர்கள், மண்டல உதவி கமிஷனர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர், கவுன்சிலர் சிங்கை சிவா, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகர திட்டமிடுநர்கள், உதவிப் பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி டெங்கு தடுப்பு லீக்: கிழக்கு மண்டலத்திற்கு முதல் பரிசு
சுதந்திர தின விழாவில் நடைபெற்ற டெங்கு தடுப்பு லீக் போட்டியில் கிழக்கு மண்டலம் முதலிடம் பிடித்து வெற்றிக் கோப்பையை பெற்றது.





