கோவை : சூலூரில் வடமாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தப்பும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோவை சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், யாசகம் கேட்பது போல் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களை பொதுமக்கள் அண்மையில் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் வீடுகளில் இருந்து செப்புக் கம்பிகள், ஏசி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சூலூர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது வடமாநிலப் பெண் ஒருவர் வேகமாக ஏறி மறுபுறம் குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் அடங்கிய செல்போன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், அந்தப் பெண் எந்தவித தயக்கமும் இன்றி காம்பவுண்ட் சுவரில் ஏறி மறுபுறம் குதித்து தப்பிச் செல்கிறார். மேலும், அவரது கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் தெருவில் சுற்றித் திரியும் காட்சிகளும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, இது சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் கொண்ட கும்பலின் வீடியோவா அல்லது அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு சூலூர் பகுதியில் சுற்றித்திரிந்தபோது பதிவான காட்சியா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
VIDEO
அதேபோல், கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்பில்லாத புதிய திருட்டுக் கும்பல் சூலூர் பகுதியில் சுற்றித் திரிகிறதா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை, அது எப்போது, எங்கு பதிவானது மற்றும் அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பது குறித்து சூலூர் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரியும் நபர்களை கண்காணிப்பதுடன், பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





