கோவை: நடைபாதை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட நீண்டநாள் தகராறில் ஆத்திரமடைந்து, அண்ணன் முறை உறவினரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் அரவான் கோவில் அருகே தேவேந்திர வேளாளர் வீதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (56). பத்திர எழுத்தராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த வேலுச்சாமி மரக்கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also read: குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி – மர்ம நபருக்கு போலீஸ் வலை!
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேலுச்சாமியின் வீட்டின் அருகே வசித்து வந்த அவரது தம்பி முறை உறவினரான சிவா என்ற சிவக்குமார் (50) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து தலைமறைவான சிவக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் சிங்காநல்லூர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நடைபாதை விவகாரம்
போலீசார் நடத்திய விசாரணையில், வேலுச்சாமி மற்றும் சிவக்குமார் இருவரின் வீடுகளுக்கும் பொதுவான ஒரு நடைபாதை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நடைபாதையை பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சிவக்குமார் அந்த நடைபாதையை பயன்படுத்தக் கூடாது என வேலுச்சாமி அடிக்கடி கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் அந்த நடைபாதையில் சென்றபோது, வேலுச்சாமியின் மகனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18-ம் தேதி இரவு சிவக்குமார் வேலுச்சாமியின் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமி அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து வேலுச்சாமியின் கை மற்றும் கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்த நிலையில், ஆத்திரம் அடங்காத சிவக்குமார் முகம் மற்றும் தலையிலும் மரக்கட்டையால் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நடைபாதை தொடர்பாக ஏற்பட்ட நீண்டநாள் தகராறே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





