கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை புலியகுளம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர், ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் பெண்கள் வந்து செல்வதாகவும், அங்கு விபசாரம் நடைபெறுவதாகவும் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த சிலர், அங்கு இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரம் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.
Also Read: கோவையில் மாறப்போகும் நொய்யல் ஆற்றங்கரை… ரூ.73 கோடியில் என்னென்ன வரப்போகிறது தெரியுமா?
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (23) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த திரட்சகன் (23) ஆகியோர் செயல்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் வாடகை வீடு தொடர்பான விவரங்கள், பெண்களை எவ்வாறு அழைத்து வந்தனர், இந்த செயல்பாட்டில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்ணு பிரசாத் மற்றும் திரட்சகன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Also Read: குலைநடுங்க வைக்கும் கோவை: இந்த மாதத்தில் 7 கொலைகள்… இன்று மட்டும் 3…!
மேலும், இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா, இதுபோன்ற நடவடிக்கைகள் வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





